மாநில அந்தஸ்தும் புதுச்சேரியும்!
மாநில அந்தஸ்தும் புதுச்சேரியும்!
புதுச்சேரியில் நிதி, வேலைவாய்ப்பு, தொழில், வரி, கடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரமின்மை என இங்கு நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல முதற்காரணம் மாநில அந்தஸ்து இல்லாமை. அது குறித்து நடந்த சம்பவங்களின் கோர்வையை மக்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் 11-ம் ஆண்டு தொடக்க விழா ஈசிஆர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பிப். 7 2021ல் கொண்டாடப்பட்ட போது என்.ரங்கசாமி கலந்து கொண்டு, மாநில அந்தஸ்துக்காக தேர்தலைப் புறக்கணிக்க நாங்கள் தயார் நீங்கள் தயாரா என அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்தார்.
மாநில அந்துஸ்துக்காக டெல்லி சென்று மத்திய அரசை வலியுறுத்த வருமாறு ரங்கசாமிக்கு அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கந்தசாமியும் அழைப்பு விடுத்தார். மாநில அந்தஸ்து பெறும் வரை புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை அனைத்து கட்சியினரும் புறக்கணிக்க முன்வந்தால் புதுச்சேரி மக்களின் நலனிற்காக திமுக தலைவரின் அனுமதியுடன் அதில் திமுகவும் பங்கேற்கும் என புதுவை மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவாவும் தெரிவித்தார்.
தேர்தல் புறக்கணிப்பில் உடன்பாடில்லை எனவும் இது குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் எனவும் என்.ஆரின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து எனவும் என் ஆர் காங்கிரஸின் கூட்டணி கட்சியான அதிமுக கட்சித்தலைவர் அன்பழகன் கருத்து தெரிவித்திருந்தார்.
2016 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் போது மாநில அஸ்தஸ்தை குறித்து பத்தோடு பதினொன்றாக அறிக்கைவிடுத்த ரங்கசாமி அவர்கள் மத்தியில் இருந்த மோடியின் அரசை எதிர்த்து புதுவையில்அப்போது ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் கம்யூனிஸ்ட், இடதுசாரிகள், சிறுபான்மை கட்சியினர் என அனைத்து கட்சிகளும் சமூக சனநாயக இயக்கங்களும் டெல்லி வரை சென்று போராட்டம் நடத்திய போதும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக எதிலும் கலந்துக் கொள்ளாமல் மவுனமாக இருந்தனர். புதுச்சேரி மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் போராட்டத்துக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை! சட்ட போராட்டங்களை முன்னெடுத்த போதும் ஒரு சிறு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை.
2019 மக்களவை தேர்தல் மற்றும் இடை தேர்தலின் போதும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் போதும் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஒன்றியத்தில் ஆண்டு கொண்டிருந்த பாஜகவிற்கு எவ்வித நெருக்கடியும் ரங்கசாமி கொடுக்கவில்லை. 2021ல் தேர்தலை முன்னிட்டு புதுவை மாநில அந்தஸ்தை பற்றி வாய் திறந்தார். பாஜகவும் தனது தேர்தல் அறிக்கையில் சிறப்பு அந்தஸ்து பெற்று தருவோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி வந்தால் புதுச்சேரியில் தேனாறும் பாலாறும் ஓடும் எனக்கூறினர்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் இதுவரை 11 முறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகளை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஓ. ஹெச். ஃபாரூக், ஆர்.விஸ்வநாதன், வி.வைத்திலிங்கம்,
ஆர்.வி. ஜானகிராமன், க.நடராசன், எஸ்.அரசி, பா.சண்முகம், அனிபால் கென்னடி, பே.ராஜவேலு, எஸ்பி.சிவக்குமார், ஆ.அன்பழகன், ஆர்.கே.ஆர் அனந்தராமன், ஏ.எம்.எச்.நாஜிம், நாரா கலைநாதன்
ஆகியோர் சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக இருந்த போது மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை முன்மொழிந்து இருக்கிறார்கள். மாநில அந்தஸ்துக்காக என்.ஆர்.காங் எம்.பிக்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் கோகுலகிருஷ்ணன் மத்தியில் தனிதபர் மசோதாவை கூட தாக்கல் செய்யல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, மாநில அந்தஸ்து பெறும் அனைத்து தகுதியும் புதுச்சேரிக்கு உண்டு என ஆதாரங்களுடன் மாநிலங்களவையில் சுட்டிக்காட்டினார்.
இன்று மாநில அந்தஸ்து வேண்டிதான் என் ஆர் காங்கிரஸ் துவங்கப்பட்டது என்று சொல்லும் என்.ரங்கசாமி ஆளும் கட்சியாக இருக்கும்போதோ எதிர்க்கட்சியாக இருக்கும்போதோ மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றவில்லை. மாநில அந்தஸ்து என்ற பெயரில் சட்ட போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. 10 ஆண்டுகாலம் பாஜகவின் கூட்டணியிலிருந்து விட்டு, 2021 தேர்தலிலும் பாஜகவை எதிர்த்து வாய்திருக்காமல், அவர்களுடனே கூட்டணி வைத்து புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக தேர்தலைப் புறக்கணிப்போம் வாருங்கள் என அனைத்து கட்சியையும் அழைத்து தேர்தல் நாடகத்தை அரங்கேற்றியது.
என். ஆர். காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்தபோது, மாநில அந்தஸ்து கேட்டு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியிடம் அளித்தார். அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் இணை அமைச்சராக, நாராயணசாமி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று மாநில அந்தஸ்தை பற்றி காங்கிரஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் அவர்கள் ஆட்சியின் போது மாநில உரிமைகளுக்காக ஆளுநரின் அளப்பறிய அதிகாரங்களை எதிர்த்து வீதியில் இறங்கி போராடும் நிலை உருவாகியிருந்தது.
தற்போது, சிறப்பு மாநில அந்தஸ்திற்கான அவசியத்தையும் தேவையையும் புதுச்சேரியில் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். ஆளுநருக்கான அதிகப்படியான அதிகாரப்பரவலை எதிர்த்து போராடி போராடியே மக்களாட்சி தத்துவங்கள் நீர்த்து போய் மக்கள் அதிகாரமற்றவர்களாக வீதியில் போராட்டமே கதியாக கிடக்கிறார்கள். சட்ட ரீதியாகவும், அறப்போராட்டங்கள் வாயிலாகவும் புதுச்சேரி உரிமைகளை மீட்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து புதுச்சேரி மக்களின் நல்வாழ்விற்காக போராடித்தான் பெற வேண்டு்ம். ஒன்றியத்தில் ஆளும் பாஜகவின் கார்ப்பரேட் அரசியலையும் இந்துத்துவா தத்துவத்துடன் இந்து ராஷ்டிரத்தை அமைக்கத்துடிக்கும் ஆர்எஸ்எஸ் நாடித்துடிப்பையும் புதுவை மக்கள் நன்கு அறிவர்!
மாநில உரிமைகளை சிதைக்கும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா ரங்கசாமி? நிதிப்பற்றாக்குறையில் தத்தளிக்கும் புதுச்சேரியை கூட்டணி கட்சியான பாஜகவுடன் போராடி வென்றெடுப்பாரா? அல்லது கூட்டணியை விட்டு வெளியேறுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக